Wednesday, November 10, 2010

தூக்கிருவோமா அவனை..........................!!!!

அது ஒரு குறுகலான தெரு. எதிரே வருகிற காருக்கு ஒதுங்க நினைத்து ஓரமாக நகர்ந்தால்.. போச்சு.....சாக்கடையில்தான் போய் விழு வேண்டியிருக்கும். அந்த இடுமுடுக்குக்கிலும் கார்களும் ஆட்டோக்களும் போய் வந்து கொண்டிருந்தன.. வண்டி பழுது நீக்க அங்கே இருந்த ஒர்க்சாப் வந்திருந்தேன்.

மாலை வேளை.... தெருவில் நடமாட்டம் நிறைந்திருந்தது.

தெருவின் இடப்புறமிருந்து உச்சபட்ச வேகத்தில் ஒரு லான்சர் கார்.. சிறுத்தைபோல சீறிக்கொண்டு..வந்தது. காரின் கறுப்பு கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்தன. உள்ளே ஓசையுடன் துடித்துக் கொண்டிருந்த பாட்டு வெளியே ஊடுருவி நெஞ்சில் அறைந்தது.
அது வந்த வேகத்தில் எதிரே வந்த சைக்கிள் காரன் சாக்கடைக்குள் சரிந்தான். வேட்டோசையில் அலறி எழும்பும் பறவைகள் போல பாதசாரிகள் சாலையோரமாய் சிதறினர்.

“எழுவுடுத்த பய.. இப்படியா வண்டி ஓட்டுவான்..”

வண்டி சரக்கென்று பிரேக் அடித்து வலதுபுற காம்பவுண்டுக்குள் நுழைந்து. ஒர்க்சாப்பில் வந்து நெரித்தபடி நின்றது. வேறெதுவும் இனி உள்ளே போவதற்கு இடமின்றி.

ஓட்டுனர் இருக்கையை விட்டு [கதவை திறந்தபடி] வெளியே வந்தவன் காரின் உயரம் கூட இல்லை. மீசை முளத்திருக்கவில்லை. ஓட்டுனர் உரிமம் வாங்கியிருக்கும் வாய்ப்பு இல்லை. பின் சீட்டில் அவனையொத்த இன்னும் நாலைந்து பேர். உயர் நிலை பள்ளியில் இருப்பவர்களாயிருக்க வேண்டும்.

வெளியே வந்தவன் பானெட்டை திறந்து காட்டி எதையோ சரி பண்ண சொல்லிவிட்டு வாசலருகே வந்து நின்றான். கார் சாவியை விரலில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தான்.
பக்கத்து பள்ளியிலிருந்து அந்தவழியாக மாணவிகள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

“லேய்.மாப்ள. அவன்கிட்ட என்னப் பத்தி சொல்லிப்பாரு. அப்படியே ஒண்ணுக்கு போயிருவான்” டிரைவர் தம்பி தொடங்கினார்.

“இல்ல மக்கா நான் பாக்கேன்னு தெரிஞ்சபிறகும் அவ பின்னாலெயே இவனும் போறான் மக்கா..”

“அதான் சொல்றேன். தூக்கிருவோமா. அவனை..”டிரைவர் தம்பியின் குரலில் ஏரியா அதிர்ந்தது.

“பிசிக்ஸ் வாத்தியார் இருக்கானே. அந்த கேணயனுக்கு சொந்தகாரன் மக்கா இவன். அதான் பாக்கேன்.”
“எவனா இருந்தா என்னல. இப்ப போவோமா. நான் தூக்குறேன் பார் அவனை. . எவன் கேட்கிறான் பாத்திருவோமா...”

ஒர்க்சாப்காரன் நிமிர்ந்து என்னை பார்த்தான். லேசாக சிரித்தான். பிறகு வேலையில் கவனமாகி விட்டான். கேட்டுக்கேட்டு சலித்திருப்பானோ.. தம்பி சலம்பல் யாரைக் கண்டும் கலங்காமல் வீராவேசமாய் தொடர்ந்து கொண்டே இருந்தது.

டிரைவர் தம்பிக்கு வில்லனாகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக யாரிடமாவது பரிந்துரைக்க வேண்டும்..

ஹா ஹா நல்ல இருந்தது அண்ணா, ஸ்கூல் படிக்கும் பசங்க இப்படி பேசும் போது சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்......... நான் ஸ்கூல் படிக்கும் போது பல பெரியவர்கள் எங்களையும் பார்த்து இப்படி பேசாமல் சிரித்து இருக்கிறார்கள்....... கடைசியில் எதுவும் அறிவுரைக் கூறாமல் அப்படியே விட்டு இருப்பது நல்ல முடிவு....... ரசித்தேன்.

வாழ்த்துக்கள்

நீங்க அந்தக்காலத்துல மோட்டார்பைக்ல போய் விட்ட சவுடாலுகள இப்ப நம்ம வயசு பசங்க கார்ல வந்து செய்யுறானுங்க.... வயித்தெரிச்சல் படாம வாழ்த்தி அனுப்புங்க.

இங்க இருக்குறதெல்லாம் ஓகே. நீங்க எப்படி பள்ளியில் படிக்கும்போது....?????

2 comments:

  1. நிதர்சனம்... என் பள்ளிப்பருவத்திலும் இதுபோன்ற சம்பவங்களை கடந்திருக்கிறேன்... இப்பொழுது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகவும் வெட்கமாகவும் இருக்கிறது..

    ReplyDelete